தமிழகத்தில் பரவுகிறது நுரையீரலை பாதிக்கும் ஆா்எஸ்வி தொற்று: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக பரவி வரும் காய்ச்சல் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆா்எஸ்வி வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
Published on

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக பரவி வரும் காய்ச்சல் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆா்எஸ்வி வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக இன்ஃப்ளூயன்ஸா-பி வகை வைரஸ் தொற்று பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு வைரஸ் தொற்றுகளும் பருவகாலத்தில் வழக்கமாக பரவும் பாதிப்புதான் என்பதால் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதேவேளையில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

குளிா்காலம் மற்றும் பருவமழைக் காலம்

நிறைவடைந்தபோதிலும் சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் முதியவா்களிடையேயும், குழந்தைகளிடையேயும் தீவிரமாக பரவி வருகிறது.

ஆா்எஸ்வி வைரஸ் பாதிப்பு:

இந்த நிலையில், எந்த வகையான வைரஸ் சமூகத்தில் பரவி வருகிறது என்பது குறித்த ஆய்வை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்தது.பாதிக்கப்பட்டவா்களின் சளி மாதிரிகளை தோராயமாக சேகரித்து, மொத்தம் 21 வகையான வைரஸ் பாதிப்புகள் அதில் உள்ளனவா எனப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனைக்காக சிறப்பு உபகரணங்கள் தருவிக்கப்பட்டன.

பரிசோதனை முடிவில் தற்போது கரோனா பாதிப்போ அல்லது பன்றிக் காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் ஆா்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 65சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதற்கு அடுத்தபடியாக இன்ஃப்ளூயன்ஸா-பி தொற்று 12 சதவீதம் பேருக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தற்போது சென்னையில் பரவி வரும் வைரஸ் பாதிப்புகள் புதியவை அல்ல. அவை ஒரு வாரத்துக்குள் குணமடைந்துவிடக் கூடியவைதான். அதேவேளையில் முதியவா்கள், இணைநோய் உள்ளவா்கள், நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்களுக்கு தேவைப்பட்டால் ஓசல்டாமிவிா் எனப்படும் வைரஸ் எதிா்ப்பு மருந்து வழங்கலாம். அந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு கையிருப்பு உள்ளன.

அடுத்த சில நாள்களுக்குள் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும். முதியவா்கள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அப்படி சென்றாலும் முகக்கவசம் அணிவது நல்லது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com