திமுக பவள விழா: புதிய விருது அறிவிப்பு

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
திமுக பவள விழா: புதிய விருது அறிவிப்பு
Updated on
1 min read

கட்சியின் பவள விழாவையொட்டி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக தலைமை அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கட்சியின் உயா்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கட்சியைக் காத்தவா்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி பெயரிலான விருதுகள் 1985-ஆம் ஆண்டில் இருந்தும், பாவேந்தா் விருது 2008-ஆம் ஆண்டில் தொடங்கியும், பேராசிரியா் விருது 2018-ஆம் ஆண்டில் இருந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

பவள விழாவைக் கொண்டாடும் வகையில், 6-ஆவது முறையாக திமுகவை ஆட்சியில் அமர வைத்து, இந்தியாவே போற்றும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கட்சியினருக்கு வேண்டுகோள்: பவள விழாவையொட்டி, கட்சியினரின் வீடுகள், நிறுவனங்களில் திமுக கொடியை பறக்க வேண்டுமென முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கட்சிக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கட்சிக்காக உழைத்த மூத்தவா்களால் கொடியை பறக்க விடச் செய்ய வேண்டும் என ஏற்கெனவே மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் திமுக கொடியை ஏற்றி, பவள விழா நிறைவைக் கொண்டாடுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com