சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து அயோத்திக்கு வரும் பரிசுகள்

சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து அயோத்திக்கு வரும் பரிசுகள்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து பரிசுபொருள்கள் வரவிருக்கின்றன.


அயோத்தி ராமஜென்ம பூமியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வருகிற ஜன. 22-ஆம் தேதி ராமரின் குழந்தை வடிவ விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி, சீதா தேவியின் பிறந்தவீட்டிலிருந்து அயோத்திக்கு பரிசுபொருள்கள் வரவிருக்கின்றன.

ஜனவரி 22 அன்று ராமர் கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை நடைபெறவிருப்பதால், அவருடைய மணமகள் சீதாவின் பிறந்த இடமான நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து 500 பேர் கொண்ட ஊர்வலம், 1,100 கூடைகளுடன் ராமருக்கு திருமணப் பரிசுகளுடன் புறப்பட்டவிருக்கிறது.

ஜனவரி 4 ஆம் தேதி ஜனக்பூரில் உள்ள ஜானகிதேவி கோயிலிலிருந்து தொடங்கும் இந்த ஊர்வலம் இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜனவரி 6 ஆம் தேதி அயோத்தியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “கூடைகளில் நகைகள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், உலர் பழங்கள், பாத்திரங்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் உட்பட ஏராளமான திருமண பரிசுகள் இருக்கும். மற்றும் பல கிலோ எடையில் அரிசி போன்ற உணவு தானியங்களும் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பாரம்பரியமாக மணமகள் திருமணமாகி மணமகனுடன் வீட்டுக்குச் செல்லும்போது பரிசாக வழங்கப்படுவது வழக்கமாம்.

டிசம்பர் 31, 2023 அன்று ஜபல்பூரில் உள்ள பேடாகாட்டில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ராமர், லட்சுமணன், அனுமன் மற்றும் சீதா தெய்வம் போன்ற உடையணிந்த கலைஞர்கள் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். 

ஊர்வலத்தில் பங்கேற்கும் 251 பேர் தங்குவதற்கு அயோத்தியில் உள்ளூர் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை பல்வேறு தனியார் விடுதிகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.

ஜனக்பூருக்கும் அயோத்திக்கும் இடையிலான தூரம் 458 கி.மீ. "நாங்கள் ஜானகிதேவி கோயிலிலிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்குவோம், பின்னர், ஜலேஷ்வர் வழியாக, பிர்கஞ்ச் சென்றடைவோம், அங்கு நாங்கள் இரவு ஓய்வெடுப்போம். சுமார் 30 கார்கள் மற்றும் ஐந்து பேருந்துகள் இந்த பரிசுகளை எடுத்துச் செல்லும் ஊர்வலத்தின் ஒரு பகுதியாக இருக்கும். ஜனவரி 5 ஆம் தேதி, நாங்கள் ரக்சால் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து பெடியாவில் மதிய உணவு சாப்பிடுவோம். பின்னர் கோரக்பூர் மற்றும் பஸ்திபூர் வழியாக அயோத்தியை அடைவோம்,’’ என்று நேபாளத்திலிருந்து வரும் குழுவின் தலைவர் கூறினார்.  ஜனவரி 6 ஆம் தேதி காலை 8 மணிக்கு 1,100 கூடைகளும் ராமர் கோயில் அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com