
பெண்கள் குறித்து ஆபாச கருத்தை வெளியிட்ட அமைச்சர் பொன்முடியை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதுவை குறிப்பிட்டு மிகவும் கொச்சையான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
பொதுக்கூட்ட மேடையில் பொன்முடி பேசிய காணொலி வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளன.
இந்த நிலையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்த கனிமொழி, “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே, திமுக பொதுக் கூட்டத்தில் பெண்கள் இலவச பேருந்து பயணம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை பேசிய பொன்முடிக்கு கண்டனங்கள் எழுந்திருந்தன.
அவரது உயர்க்கல்வித் துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.