
தமிழகத்தில் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு இடப் பற்றாக்குறை குறித்து தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பல்வேறு வணிக நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. மாநிலத்தில் முதலீடு அதிகரித்து வரும்நிலையில், அதற்கேற்ற வகையில், தரமான அலுவலகங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், அலுவலகங்களை உருவாக்க தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பையடுத்து, இது நம்பகமான முதலீடுதான் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுவதாவது, தமிழ்நாட்டில் உயர்தர ஏ-கிரேடு உள்கட்டமைப்பில் பெரிய வணிக நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும். 2023 ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் சுமார் 9.6 மில்லியன் சதுர அடி இடங்களை, அலுவலகப் பயன்பாட்டுக்காக நிறுவனங்கள் எடுத்துள்ளன. இது, முந்தைய ஆண்டைவிட 31 சதவிகிதம் அதிகம். தொழில்நுட்பத் துறை, வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சியே, இதற்கு காரணம்.
2022 ஆம் ஆண்டில் கூட்டுப்பணி துறையின் பங்களிப்பு 12 சதவிகிதமாக இருந்தநிலையில், 2023-ல் 20 சதவிகிதமாக உயர்ந்தது. 2026 ஆம் ஆண்டுக்குள், சென்னையில் அலுவலக இடங்களின் மொத்த அளவு 100 மில்லியன் சதுர அடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு பல மில்லியன் ச.கி.மீ. அலுவலக இடங்கள் தேவைப்படுகிறது. கோவை, மதுரை, திருச்சி, ஒசூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அலுவலக இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் பகுதிகளிலும் முதலீடு தேவைப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் பல லட்சம் சதுர அடி நிலங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மதுரை மற்றும் திருச்சியிலும் அதிக அளவிலான அலுவலக இடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழக அரசு, இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்த வாய்ப்பை, தனியார் துறைகள் பயன்படுத்தி, அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.