குருத்தோலை ஞாயிறு: நெல்லையில் கிறிஸ்தவர்கள் பவனி

நெல்லையில் குருத்தோலை ஞாயிறு தொடர்பாக...
குருத்தோலை பவனி செல்லும் மக்கள்.
குருத்தோலை பவனி செல்லும் மக்கள்.
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை பவனியாக சென்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி கடந்த மார்ச் 5 ஆம் தேதி தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பயணமும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், குருத்தோலை ஞாயிறு சிறப்புப் பவனி பாளையங்கோட்டையில் கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் தேவாலயத்தில் இருந்து தொடங்கிய பவனியில், திருநெல்வேலி எம்பி ராபர்ட் புருஸ் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தபடி ஓசன்னா பாடல்கள் பாடி முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்றனர்.

இதுகுறித்து ஆயர்கள் கூறுகையில், ஞாயிறு என்பது தவக்காலத்தின் இறுதி ஞாயிறாகவும், புனித வாரத்தின் தொடக்க ஞாயிறாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்து மக்களுக்காக பாடுகளை ஏற்று மனுக்குலத்தை மீட்பதற்காக அரசருக்குரிய மரியாதையுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்ததை இந்த பவனி நினைவூட்டுகிறது.

ஓசன்னா என்பதற்கு இயேசுவே எங்களுக்கு உதவ வாரும் என்பதே அர்த்தமாகும். இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், இறப்பையும் தியானித்து அவரது உயிர்ப்பின் பெருநாளை கொண்டாடி மகிழும் விதமாக விவிலியத்தின் வார்த்தையின் அடிப்படையில் தங்களை தயார்படுத்துவதன் தொடக்கமே குருத்தோலை ஞாயிறு என்றனர்.

இதேபோல மேலப்பாளையம் அருகே சேவியர்காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம் சார்பில் சேகர குரு காந்தையா தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. சேவியர் காலனியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, ஏப்ரல் 17 ஆம் தேதி பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் திருச்சடங்குகளும், 18 ஆம் தேதி புனிதவெள்ளி மும்மணி பிரார்த்தனை நிகழ்வுகளும் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஈஸ்டர் பண்டிகையையொட்டி கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலியும், தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் 20 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளன.

இதையும் படிக்க: தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com