
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் ஒருபகுதியாக ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, தூத்துக்குடியில் உள்ள சின்னக்கோயில் என அழைக்கப்படும் திரு இருதய ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதேப்போன்று உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்திலும் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதிலும் ஏராளமா இறைமக்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனர். பின்னர், சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ, மறை மாவட்ட செயலர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் குருத்தோலையை மந்திரித்து, ஜெபம் செய்து பின்னர் இறை மக்கள் கையில் பிடித்தவாறு ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக ஆலயத்துக்குச் சென்றனர்.
பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்குமக்கள் பங்கேற்றனர்.
மேலும், மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளிலும், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... யாகாவா ராயினும் நாகாக்க...