
மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார்; சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப். 27) தெரிவித்தார்.
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் 2வது நாளாக இன்று நடைபெற்றது.
இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுப் பேசியதாவது,
நேற்று பேசும்போது இந்த சந்திப்பு ஓட்டுக்காக அல்ல என்று உங்களிடம் (மக்களிடம்) கூறினேன். தெளிவான உண்மையான வெளிப்படையான கட்சி தமிழக வெற்றிக் கழகம்.
சிறுவாணி நீர் போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமான ஆட்சியாக இருக்கும். ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் இருக்கமாட்டார்கள்.
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை; மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார்.
வெற்றியை அடைவதற்கு உங்கள் செயல்பாடுகள் முக்கியம்; நீங்கள்தான் முதுகெலும்பு.
மக்களுடன் வாழ், மக்களிடம் செல், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய் என்கிற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை மனதில் வைத்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்.
வாக்கு செலுத்தும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது நமது கடமை. நமக்காக வாக்களிக்கும் மக்கள் ஓட்டு செலுத்துவதை கொண்டாடமாகச் செய்ய வேண்டும். அந்த மனநிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
அப்போது, புரியும், தவெக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல என்று. இதை மனதில் வைத்து செயல்படுங்கள். நம்பிக்கையோடு இருங்கள்; வெற்றி நிச்சயம் என விஜய் பேசினார்.
இதையும் படிக்க | சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!