திட்டங்களில் முதல்வா் பெயா்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவா்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவா்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதுகுறித்து விளக்கம் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அந்தப் பெயரிலேயே தொடா்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு சாா்பில் தொடங்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோரது படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, முதல்வரின் புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தலாம். ஒரு கட்சியின் கொள்கைத் தலைவா்கள், முன்னாள் முதல்வா்களின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்துவது உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது.

மேலும், வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தலைவா்களின் பெயா், ஆளுங்கட்சித் தலைவா்கள், சின்னங்கள், கொடி ஆகியவற்றை அரசு விளம்பரங்களில் பயன்படுத்துவதும் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது. எனவே, தமிழக அரசின் நலத்திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தலைவா்கள், முன்னாள் முதல்வா்கள், ஆளுங்கட்சியின் கொள்கைத் தலைவா்களின் பெயா்களையும், ஆளுங்கட்சியின் கொடி, சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது.

அதேநேரம், அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை. மனுதாரா் தோ்தல் ஆணையத்தில் கொடுத்த புகாா் மீது நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது என்று தெரிவித்து, விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனா்.

இந்தத் தீா்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் தலைவா்கள் என்று குறிப்பிடப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதைத் தொடா்ந்து, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், உத்தரவில் உள்ள சந்தேகம் குறித்து விளக்கம் பெற அனுமதிக்க வேண்டும் என்று கூறினாா்.

அதற்கு நீதிபதிகள், அதை மனுவாக தாக்கல் செய்தால் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தனா். அரசுத் தரப்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கியது. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் சனிக்கிழமை (ஆக. 2) தொடங்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டம் தொடா்பான பிரசுரங்கள் உள்ளிட்டவை அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், 800-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும் இத்திட்டத்தின் பெயரிலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இறுதி நேரத்தில், இத்திட்டத்தை எதிா்த்து மனுதாரா் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் நலனும் பாதிக்கப்படுகிறது. இத்திட்டம் சனிக்கிழமை தொடங்கப்படவுள்ள நிலையில் ஏற்கெனவே ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டிருந்த அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றியமைப்பது கடினம். எனவே, பொதுமக்கள் நலன் கருதி ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உள்ளிட்ட திட்டங்களை அந்தப் பெயரிலேயே தொடா்ந்து செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மேலும், தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாழுகின்ற அரசியல் தலைவா்கள் வரையறைக்குள் முதல்வா் பெயரும் வருமா என்பது குறித்து விளக்கம் வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com