
கோவை: தன்னுடைய நிலத்தில் இருந்த கிணற்றைக் காணவில்லை என்று திரைப்படம் ஒன்றில் வடிவேல் காமெடி செய்திருந்தார். அந்தக் காமெடி போன்று கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இல்லாத வீட்டுக்கு, வீட்டு வரி வசூலித்த கோவை செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகம்தான் அதிர்ச்சிக்குக் காரணமாகியிருக்கிறது.
கோவை, செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகர் பகுதியில், இலவச வீட்டுமனை பெற்ற சுமார் 900 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேற வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த இடம் வேறொறு பயனாளிக்கு வழங்கப்படும் என்பது விதி.
இந்த நிலையில் கல்பனா ராமசாமி என்பவர் தனக்கு இருக்கும் சொந்த வீட்டை, மறைத்து முறைகேடாக இலவச வீட்டுமனை பட்டா பெற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த 15 ஆண்டுகளாக இலவசமாக பெற்ற இடத்தில் வீடும் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால் அந்த இடம் வேறொரு பயனாளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் கல்பனா ராமசாமி, கோவை செட்டிபாளையம் பேரூராட்சி அதிகாரிகளின் துணையுடன், இலவசமாக கிடைத்த வீட்டுமனை இடத்தில் வீடு கட்டி குடி இருப்பதாக சொத்து வரி கட்டி வந்துள்ளார்.
இந்த முறைகேட்டின் ஆதாரங்களை திரட்டி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஐயப்பன் என்பவர், தான் சேகரித்த ஆதாரங்களை செட்டிபாளையம் செயல் அலுவலருக்கு வாட்ஸாப் மூலம் அனுப்பி வைத்து நியாயம் கேட்டதாகத் தெரிகிறது.
இதனை எதிர்த்து ஐயப்பன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், நடிகர் வடிவேலுவின் திரைப்படத்தில் தோண்டாத கிணறுக்கு வங்கியில் கடன் பெற்று, கடனை கட்ட முடியாத நிலையில் எனது கினற்றை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தும் காமெடி காட்சிகளை போல், இல்லாத வீட்டை இருப்பதாகக் காட்டி, வீட்டு வரி செலுத்தி வந்திருப்பது தெரிய வந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.