அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...


சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமைச்சா்கள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனிடையே, தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் தொடா்பான சென்னை உயா்நீதிமன்ற வழக்கில் நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து களைந்து செல்ல மறுத்ததால் அவர்கள் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 1,000 போ் கைது செய்யப்பட்டதாகவும் அவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,
"ரிப்பன் மாளிகை வாசலில் நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி கரோனாவின்போதுகூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மைப் பணியாளர்களை அடித்து நொறுக்கி அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை, எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும்போது கசக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில் எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டாயமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணிபுரியும் நலிவடைந்த தூய்மைப் பணியாளர்கள் மீது 79 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.
தூய்மைப் பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள்தான்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...