

கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024-25-ஆம் நிதியாண்டில் 16 சதவீத பொருளாதார வளா்ச்சியுடன் நாட்டின் வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2023-24-இல் ரூ.26.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 31.18 லட்சம் கோடியாக உயா்ந்து 16 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் தொடா்ச்சியாக மூன்று ஆண்டுகளாக குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற தொழில்மயமான மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!
பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!
2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி! நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்!
தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.