

நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் தேர்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு செய்துள்ள நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் என்பது வரும் தேர்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்றார் முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நாடு முழுவதும் 12 கோடிப் பேர் பயனடைந்து வந்தார்கள். சுமார் 8.60 கோடிப் பேருக்கு வேலை அட்டை வழங்கப்பட்டிருந்தது. படிப்படியாக வேலை அட்டைகள் வழங்குவது குறைக்கப்பட்டு 4.5 கோடிப் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திட்டம், எங்களுடைய திட்டம் அல்ல. ஹிந்தி பேசுவோருக்கும் புரியாத பெயர். ஆங்கிலம் தெரிந்தோருக்கும் புரியாத பெயர். அதேநேரத்தில் வெறுமனே பெயரை மட்டும் அவர்கள் திருத்தவில்லை.
மொத்தமாக அதன் நோக்கத்தையே சிதைப்பது, குலைப்பது, புதைப்பதுதான் நோக்கம். இத்திட்டத்தில் வேலை உத்தரவாதம் என்பதே இல்லை. ஒவ்வொரு மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில பகுதிகளை அறிவித்து அந்தப் பகுதியில் மட்டும் வேலை வழங்கப்படும். நாடு முழுமைக்குமான திட்டமல்ல.
ஏற்கெனவே நிதித் தட்டுப்பாடு, கடன் வாங்கி ஆட்சி நடத்த வேண்டிய சூழலில் 40 சதவிகிதம் மாநில அரசின் பங்குத் தொகை என்பது, கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டிவரும்.
இதனால், பல மாநிலங்களே வேலை வழங்கும் வரையறுக்கப்பட்ட பகுதிகளைக் குறைக்கக் கோரும் சூழல் வரும். வேலை வழங்கும் நாட்களைக் குறைக்கக் கோரும் சூழல் வரும்.
கீழ்மட்டத்தில் இருக்கும் 12 கோடிப் பேரின் வயிற்றில் அடிக்கும் செயல், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் தலையாய பிரச்னையாக இது இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.