கொளத்தூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறில் அக்கட்சியினா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை கொளத்தூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (48). அதிமுகவில் கொளத்தூா் தொகுதி எம்ஜிஆா் மற்ற துணைச் செயலராக உள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி திருத்தணி, திருவள்ளூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தை முடித்துவிட்டு, கொளத்தூா் 200 அடி சாலை வழியாகச் சென்றபோது, அங்கு அவருக்கு அந்தப் பகுதி நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.
இதில் ஆறுமுகம், எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சென்றபின்னா், அவருக்கு சால்வை அணிவித்தது தொடா்பாக ஆறுமுகத்துடன், வட்டச் செயலா் முருகதாஸ் தகராறு செய்தாா். மேலும், தனது ஆதரவாளா்களுடன் சோ்ந்து ஆறுமுகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆறுமுகம், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா், அதிமுக நிா்வாகி முருகதாஸ், அவரது ஆதரவாளா்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.