கடந்த வாரத்தில் இரு வருந்தத்தக்க சம்பவங்கள்: முதல்வர் ஸ்டாலின்

கடந்த வாரத்தில் வருந்தத்தக்க இரு சம்பவங்கள் நடந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.
Updated on
2 min read

கடந்த வாரத்தில் வருந்தத்தக்க இரு சம்பவங்கள் நடந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இன்று நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் பேசியதாவது, தமிழ்நாட்டிற்கு நியாயமாக வர வேண்டிய நிதியைக் கொடுக்க மாட்டீர்கள். பேரிடர் நேரத்தில் கூட உதவி செய்ய மாட்டீர்கள். ஆனால், எங்கள் மாநிலத்தின் அமைதியை மட்டும் கெடுக்க நினைப்பீர்களா? நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள்! திருந்துங்கள்; இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறேன்.

ஒன்றிய அரசு தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், மக்கள் மன்றத்தில் நாளுக்கு நாள் மரியாதையை நீங்கள் இழப்பீர்கள். கடந்த வாரத்தில் வருந்தத்தக்க இரு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கும்பமேளாவிற்குச் சென்ற பக்தர்களுக்குச் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் நெரிசலில் சிக்கி, 48 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் 30 பேர்தான் என்று அங்கிருக்கும் பா.ஜ.க. அரசு சொல்கிறது. 48 பேர் என்று ஊடகங்கள் சொல்கிறது. இன்னும் கூடுதலாக இருக்கும் என்று அந்த மாநிலத் தலைவர்கள் சொல்கிறார்கள்.

ஜே.சி.பி. இயந்திரத்தை வைத்து உடல்களை அகற்றியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டி இருக்கிறார். அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவற்குக் கூட அனுமதிக்கவில்லை. கும்பமேளாவிற்கு வாருங்கள் என்று பக்தர்களை அழைத்தீர்களே! அவர்களுக்குப் பாதுகாப்பு தந்திருக்க வேண்டியது பா.ஜ.க. அரசின் கடமை இல்லையா? உங்கள் மதவாத அரசியல் ஏன் மௌனம் ஆகிவிட்டது? அடுத்த மிகப்பெரிய கொடூர சம்பவம், அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்கள் கையிலும், காலிலும் விலங்கு மாட்டி இராணுவ விமானத்தில் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் பேட்டி கண்ணீர் வரவைப்பதாக இருக்கிறது. இது தொடர்பாக, அமெரிக்க அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடந்ததை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளிக்கிறார். இதுதான் இந்தியர்களைக் காப்பாற்றும் லட்சணமா? தன்னுடைய உலகப் பயணங்கள் மூலமாக இந்தியாவின் மதிப்பை உயர்த்திவிட்டதாக மார் தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடிக்கு, 104 இந்தியர்கள் நடத்தப்பட்ட விதம் அவமானமாகத் தெரியவில்லையா? அமெரிக்க அதிபர் உங்கள் நண்பர்தானே?

கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோரை சந்தித்த மோகன் பாகவத்

அவருக்காக அமெரிக்கா சென்று பிரசாரம் எல்லாம் செய்தீர்களே? அவரிடம் இந்தியர்கள் குறித்து பேசியிருக்க வேண்டாமா? உங்கள் இந்திய தேசிய அரசியல் மௌனம் ஆனதற்கு என்ன காரணம்? ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பது தவிர, வேற எந்த நோக்கமும் ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு இல்லை என்று இதன் மூலம் தெரிகிறதா? இல்லையா?. ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கும் - கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடகு வைத்த அ.தி.மு.க.விற்கும் ஒட்டுமொத்தமாகப் பாடம் புகட்டும் தேர்தலாக 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அமைய இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றியைப் பெற்றதைப் போன்று, சட்டப்பேரவைத் தேர்தலிலும் முழு வெற்றியைப் பெறுவோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com