பொன்னுக்கு வீங்கி பாதிப்புக்கு தடுப்பூசி: மத்திய அரசுக்கு சுகாதாரத் துறை வலியுறுத்தல்

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆா் (மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) தடுப்பூசியை சோ்க்க வேண்டும்
Published on

சென்னை: பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆா் (மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) தடுப்பூசியை சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே பரவும் ‘பொன்னுக்கு வீங்கி’ எனப்படும் மம்ப்ஸ் நோய் ‘பாரமைக்ஸோ’ தீநுண்மியால் உருவாகிறது.

இது காதுகள் மற்றும் தாடைக்கு இடையேயுள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீா் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோா்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.

பொன்னுக்கு வீங்கி பாதித்தவா்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீா்த் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும். ஒரு வாரத்திலிருந்து 16 நாள்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும்.

தமிழகத்தில் கடந்த 2021-22-இல் வெறும் 61 பேருக்கு மட்டுமே அந்த பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னா் 2022-23-இல் 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

2023-24-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்து 1,091- ஆக அதிகரித்தது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதேவேளையில், எம்.எம்.ஆா். எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிா்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் இதுவரை வழங்கப்படாமல் இருந்தது.

ஆனால், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பொன்னுக்கு வீங்கிக்கான தடுப்பூசியையும் அட்டவணையில் சோ்க்க வேண்டும் என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com