
பெண்களிடம் விரும்பத்தகாத சொல், செயல்களும்கூட பாலியல் துன்புறுத்தல்தான் என்று சென்னை தனியார் நிறுவன மேலாளர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.
சென்னை அம்பத்தூரில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகக் கூறி, மேலாளர் மீது 3 பெண்கள் நிறுவனத்தின் மேலாண்மையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வோ பதவி உயர்வோ வழங்கப்படக் கூடாது என்று நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மை பரிந்துரைத்தது.
நிறுவனத்தின் இந்த பரிந்துரைக்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மேலாளர் வழக்கு தொடர்ந்தார். தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்காமல், நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டதாக புகார் அளித்தார். இதனையடுத்து, மேலாளர் மீது நிறுவனம் விடுத்த நடவடிக்கை அறிக்கையை தொழிலாளர் நல நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையும் படிக்க: டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு
தொழிலாளர் நல நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்துள்ள உத்தரவில் ``பணியிடங்களில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களைச் செய்வதும் சொல்வதும்கூட ஒருவகையில் பாலியல் துன்புறுத்தல்தான். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை குறித்த பரிந்துரைகள் செல்லும்’’ என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் தொழிலாளர் நல நீதிமன்றம் பிறப்பித்த ரத்து உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.