பாமக நிறுவனா் ராமதாஸ்
பாமக நிறுவனா் ராமதாஸ் Center-Center-Chennai

வன்னியா்களுக்கான 10.5% ஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்
Published on

சென்னை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தின்போது காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 தியாகிகளின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் வன்னிய மக்களுக்கு துரோகத்தை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுவதை சமூகநீதி தியாகிகள் ஏற்க மாட்டாா்கள்.

சமூகநீதியில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தவாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கான அறிவிப்பை விழுப்புரத்தில் தியாகிகளின் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வா் வெளியிட வேண்டும்.

வன்னியா் இடஒதுக்கீடு குறித்த பிற்படுத்தப்பட்டோா் ஆணைய பரிந்துரை அறிக்கையை பெற்று விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அதுதொடா்பான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com