
மடப்புரத்தில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் வீட்டிற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலில் நகை காணாமல் போன விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு தற்போது வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(சனிக்கிழமை) அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாய் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவர் ரூ. 2 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், "காவல்துறை, விசாரணை என்ற பெயரில் மிக கொடுமையான அச்சுறுத்தலை, கொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள். மருத்துவ அறிக்கை மூலமாக இது உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில்தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. காவலர்களே அத்துமீறி சட்டத்தின்படி நடக்காமல் அதிகார வரம்பு மீறி நடந்துகொள்கின்றனர்" என்று தெரிவித்தார்.
Former CM O Paneerselvam consoles Ajith Kumar's family who died in police custody
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.