
கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92) பத்திரப்பதிவு எழுத்தராக இருந்துள்ளார். இவரது மனைவி சரோஜா (82). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில் ஒரு மகள் குடும்பத்துடன் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவில் பிரிவில் வசித்து வருகிறார். ராகிருஷ்ணன் - சரோஜா இருவரும் அவர்கள் வீட்டில் மகளுடன் இருந்து உள்ளனர். வயது மூப்பின் காரணமாக ராதாகிருஷ்ணன் சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்தார்.
குடும்பத்தினர் சோகமாக இருந்த நிலையில், கணவனின் உடல் அருகே அழுதபடி உட்கார்ந்திருந்த சரோஜா துக்கம் தாங்காமல் திடீரென மயங்கி கணவரின் உடல் அருகே சாய்ந்து உள்ளார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மின் மயானத்தில் இருவர் உடலும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.
ராதாகிருஷ்ணன் - சரோஜா தம்பதிகள் எப்போதும் எங்குச் சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர். இருவரும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தவர்கள், இறப்பிலும் பிரியாமல் உயிர்விட்ட சம்பவம் குடும்பம் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.