தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை: பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Pm modi tuticorin speech
தூத்துக்குடியில் பிரதமர் மோடி.
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். தனி விமானத்தில் தூத்துக்குடி வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், ராம் மோகன் நாயுடு, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் தளவாய் சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். தொடக்கமாக சனிக்கிழமை இரவு வந்த அவா், ரூ. 452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்துவைத்தார்.

மேலும், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் ரூ.4800 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தமிழில் வணக்கம் எனக் கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். அதில், வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு ராமேஸ்வரம் பூமியில் கால் வைத்துள்ளேன். அயல் நாட்டு பயணங்களில் வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இன்று கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை படைப்போம். வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். 2014இல் தமிழக வளர்ச்சி நோக்கி குறிக்கோள் பயணம் தொடங்கியது. அதன் சாட்சி தூத்துக்குடி. இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, எரிசக்தி துறைகளில் தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்செந்தூர் முருகனின் ஆசியோடு வளர்ச்சித் திட்டங்கள் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன.

ஓடிடியில் கவனம் பெறும் மார்கன்!

ஆழ்கடல் பகுதியில் சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி. பாரதிக்கு தூத்துக்குடியுடன் உள்ள உறவு, எனது சொந்த தொகுதியான காசிக்கும் உண்டு. சுதந்திரமான பாரத கனவை உருவாக்கியவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோள். பில்கேட்ஸுக்கு தூத்துக்குடியின் முத்துகளை பரிசாக கடந்த ஆண்டு வழங்கினேன். பாண்டிய நாட்டின் சுத்தமான முத்துகள், உலக பொருளாதாரத்தில் அடையாளமாக இருந்தன. இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம் அளிக்கும்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய பொருள்களை இங்கிலாந்தில் குறைந்த விலையில் வாங்கலாம். இந்தியாவில் உள்ள 99% பொருள்களை இங்கிலாந்தில் வரி இல்லாமல் விற்க முடியும். தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயனடையும். ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். இந்தியா தயாரித்த ஆயுதங்களால், எதிரிகளின் பதுங்கு குழிகள் மண்ணோடு மண்ணாகின.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ.450 கோடி மதிப்பிலான தூத்துக்குடி புதிய விமான முனையம் மூலம் 20 லட்சம் பயணிகளை கையாளலாம். ரூ.2,500 கோடி மதிப்பில் இரு புதிய சாலை கட்டமைப்புகளை திறந்துவைத்துள்ளோம். புதிய சாலைகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி அடையும். தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே துறை உள்ளது. தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் புத்தாக்கம் பெற்றுள்ளன.

தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

Prime Minister Modi has said that the central government is taking steps to improve the infrastructure of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com