
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை எங்களுக்குச் சொந்தமானது என்பதால் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தொல்லியல் துறை வாதம் முன் வைத்தது.
இதனைக் கேட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், திருப்பரங்கும் மலை அனைவருக்கும் சொந்தமானது. கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளை ஏப். 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். தொல்லியல் துறை தரப்பில் பதில் மனுவும் ஏற்கனவே உள்ள உத்தரவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஆட்சியர், காவல்துறை ஆணையர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேண்டுதல் வைத்து, மக்கள் மலை மீது ஆடு, கோழிகளை பலியிடுவார்கள் என்று ஆட்சியர் அளித்த பதிலில் கூறப்பட்டிருந்தது. மலை மீது இரு தரப்பு மக்களும் தற்போது வழக்கத்தில் உள்ள வழிபாடுகளை மட்டும் பின்பற்ற அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி
மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனுவில், மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் புகழ் பெற்றது. பாண்டிய மன்னா் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டாா் குகைக் கோயிலும், 11 தீா்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இங்கு எந்தவிதமான உயிா்ப் பலியும் மேற்கொள்ளக் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தா் பாதுஷா தா்கா உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த தா்காவின் சாா்பில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இதேபோன்று, திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த மலையை சமணா் குன்று என அறிவிக்க வேண்டும். சிக்கந்தா் தா்காவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இந்த தா்காவை புதுப்பிக்கும் பணிக்கு காவல் துறையினா் தொந்தரவு தரக் கூடாது. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தக் கூடாது என வலியுறுத்தி, பலரும் வழக்குகள் தொடுத்தனா்.
இந்த வழக்குகள் அனைத்தும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.