திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற கடந்த ஆண்டு, டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். இருப்பினும், திருக்காா்த்திகை நாளான டிசம்பா் 3-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கடந்த ஆண்டு, டிசம்பா் 4-ஆம் தேதி இரவு மனுதாரா் ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் மலைக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த பிப். 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் வழக்கு விசாரணையின் போது, நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளித்து நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். இருப்பினும், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் நேரில் முன்னிலையாக வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்தும் பல்வேறு உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தாா்.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்ட 6 போ் தனித் தனியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதிஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: இந்த வழக்கைப் பொருத்தவரை, தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தாா். அந்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடா்பாக ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கோயில் நிா்வாகமே தீபத் தூணில் பூஜை செய்யலாம். இதனால், பிற பிரச்னைகளுக்கும் தீா்வு காண முடியும்.
திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடா்பான கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஏப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க முதல் ஒத்துழைப்பு அரசிடமிருந்து வரவேண்டும்! - உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை

திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


