அரசுப் பள்ளி மாணவர்கள்...
அரசுப் பள்ளி மாணவர்கள்...

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்..
Published on

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் 3,088 உயா்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்.25-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதைச் செயல்படுத்தும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பொது தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், அதன் ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

அவற்றை தொகுத்து அறிக்கையை 10 நாள்களுக்குள் இயக்குநரகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படாதவாறு விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com