
சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையிடம் பொது இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க காவல்நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், பொது இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் திரட்டி தனிப்படையிடம் ஒப்படைக்க ஈரோடு மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஏப்.28, 29, 30 ஆகிய 3 நாள்களின் சிசிடிவி காட்சிகளை தனிப்படையிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி ஊராட்சிக்குள்பட்ட கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் அம்மாள் (67). இவா்களது மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். வயதான தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனா். இருவரையும் மா்ம நபா்கள் கொடூரமாகத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இந்நிலையில் இவா்களது வீட்டில் இருந்து வியாழக்கிழமை துா்நாற்றம் வீசியதை அடுத்து அருகில் வசித்த உறவினா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, கொலை செய்யப்பட்டு இருவரது சடலங்களும் கிடந்துள்ளன.
முதிய தம்பதி, கொலை நடந்து 3 நாள்களுக்கு மேல் ஆனால், உடல்கள் அழுகி துா்நாற்றம் வீச ஆரம்பித்தபோதுதான் இந்தக் கொலையே வெளிச்சத்து வந்துள்ளது. நகை, பணத்துக்காக கொலை நடைபெற்றுள்ள நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க ஈரோடு ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், கொலை நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிளையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.