

இந்திய மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி மக்கள் 26 பலியானதன் விளைவாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9 ஆம் தேதிகளில் நள்ளிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இதில், இந்திய தரப்பில் பொதுமக்கள் பலர் காயமடைந்த நிலையில், 2 பள்ளி மாணவர்கள் உள்பட 5-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதுபற்றி தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தற்போதைய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை பேசுகையில், “பாகிஸ்தான் அதனுடய நாடு அதன் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு நாட்டுக்குதான் ஒரு ராணுவம் தேவை. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின்கீழ்தான் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகிறது.
பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிதான் அவர்கள் நாட்டையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடன் வாங்கவில்லை என்றால், அவர்களுக்கு மின் வசதிக்குக்கூட பணமிருக்காது.
பாகிஸ்தான் பெரிய நாடு கிடையாது. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12-ல் ஒரு பங்குதான் இருக்கிறது பாகிஸ்தான். தொடர்ந்து இதுபோன்று மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவந்தால், உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது. பிரதமர் மோடி அறத்தின் அடிப்படையில் போரை நடத்தி வருகிறார்” என்றார்.
இதையும் படிக்க: பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்தியா: புதிய விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.