
ஆத்தூர் அருகே சுற்றுலா வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் மீனா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கோடை விடுமுறையையொட்டி கேரள மாநிலம் ஆலப்புழா பகுதிக்கு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா வேனை புதுச்சேரியைச் சேர்ந்த அப்துல் ஹமீப் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனிடையே, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லியம்பாளையம் பகுதியில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் இருந்து ஆலப்புழா நோக்கி சென்ற சுற்றுலா வேன் செல்லியம்பாளையம் பகுதியில்சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை ஓட்டுநர் திருப்பியபோது, எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தச் சுற்றுலா வேனில் சென்ற 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படுகாயம் அடைந்தவர்களை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: இந்திய பாதுகாப்பை உறுதி செய்துவரும் 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ தலைவர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.