

ஈரோடு: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிறகு, நடைபெற்ற எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை, தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளோம் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
பசும்பொன்னில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த ஒன்றாகச் சென்ற செங்கோட்டையனை, அதிமுகவிலிருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிறகு 2019, 2021, உள்ளாட்சி தேர்தல், 2024 தேர்தல் என தொடர்ந்து அதிமுக தோல்வியைச் சந்தித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தோல்வியையே காணாதவர், ஜெயலலிதா ஒரு முறை தோற்றால் மறுமுறை வெற்றியைக் காண்பார். ஆனால், ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆட்சி செய்த பழனிசாமி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்தேன். கட்சி உடைந்துவிடக் கூடாது என்றுதான், பத்து நாள்களுக்குள் பேச்சு தொடங்குங்கள் என்று வலியுறுத்தினேன். அப்போதே, கெடுவா என்று கேட்டீர்கள். இல்லை என்றேன். 10 நாள்களுக்குள் முடிவெடுங்கள். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்ளலாம். யாரிடமாவது கருத்தும் கேளுங்கள். ஆனால், யாரைச் சேர்ப்பது என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் என்று வலியுறுத்தினேன்.
நான் விதித்தது கெடு அல்ல, பேசி முடிவெடுக்க வேண்டும் என்றுதான் என் கருத்தை முன் வைத்தேன். ஆனால் கெடு விதித்து விட்டார் என்றுதான் செய்திகள் வெளியாகின.
இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அதிமுக தொண்டர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். நமது இயக்கத்தை வலிமையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்தற்காக கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனால், அதன் பிறகு எனது கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன. கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பைத் தவிர மற்றவற்றிலிருந்து நீக்கப்பட்டேன்.
அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் வலிமையோடு இருக்கும் என்று சொன்னார்களே அதனை நிறைவேற்றவே என எனது கருத்தை சொன்னேன். ஒருவேளை, 2026ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்பே சொல்லவில்லை என்ற கேள்வி எழும் என்பதால்தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், என்னைத்தான் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள் என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.