

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலுச்சாமி புரத்திற்கு சென்று அங்கு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு நவீன கருவியான 3டி லேசர் ஸ்கேனருடன் ஆய்வு செய்தனர்.
சிபிஐ அதிகாரிகள் இன்று காலை அவர்கள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகைக்கு வேலுச்சாமி புரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கடைகள் வைத்திருக்கும் மளிகைக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் துணிக்கடை வியாபாரிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.