மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்...
M.K. Stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (03.11.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 03.11.2025 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   

மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலையோடு தெரிவித்துள்ளளார்.

ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும்,  மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Summary

Fishermen arrest: Chief Minister M.K. Stalin's letter to the Union External Affairs Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com