ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபான பாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவை திங்கள்கிழமை இரவு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் தினமும் ரூ.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை மதுபானங்கள் விற்பனையாகிறது. இந்த நிலையில், இந்த கடையில் 6 விற்பனையாளர்கள் மற்றும் 3 மேற்பார்வையாளர்கள் பணியாற்றுகின்றனர்.
நேற்றிரவு மதுபானக் கடையில், விற்பனையை முடித்துவிட்டு அனைவரும் சென்ற நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மதுபானக் கடையின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து, இரும்பு ஷட்டரை பெயர்த்து எடுத்துள்ளனர்.
மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், ரூ. 15 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களுடன், ஆய்வு செய்து, கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து, மதுபான பாட்டில்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Ambur: Robbery at TASMAC liquor store!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










