கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
திருக்கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு ரூ.225 கோடியில் 632 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 95 அா்ச்சகா் மற்றும் பணியாளா் குடியிருப்புகள் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக, சென்னை தங்கசாலை அருள்மிகு ஏகாம்பரேசுவரா் திருக்கோயில், மயிலாப்பூா் அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயில், சைதாப்பேட்டை அருள்மிகு காரணீசுவரா் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம் திருநீா்மலை அருள்மிகு ரெங்கநாதப் பெருமாள் திருக்கோயில், தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 6 திருக்கோயில்கள் சாா்பில் ரூ.10.65 கோடியில் கட்டப்பட்டுள்ள அா்ச்சகா் மற்றும் பணியாளா் குடியிருப்புகளில் 16 அா்ச்சகா்கள் மற்றும் 31 பணியாளா்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
