

தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருந்த கொரிய நாட்டு நிறுவனம், ஆந்திர பிரதேசத்துக்குச் சென்றதற்கு, முதல்வர் ஸ்டாலின் அரசுதான் காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில், எடப்பாடி பழனிசாமி ``கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக, முதல்வர் வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என ஷோ காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?
வருவதாக சொன்ன நிறுவனங்களே திரும்பச் செல்லும் நிலையில்தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள் என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?
முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில்துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.
இத்தகைய ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? தமிழ்நாடு, தொழிற்துறை வாய்ப்புக்கு ஏற்ற இடம். ஆனால், இன்று ஸ்டாலின் ஆட்சியால் வாய்ப்புகளைத் தவறவிட்ட இடமாக மாறியது.
புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம்.
ஆனால், இந்தக் கதை இத்தோடு முடியவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மீண்டும் எழும், கட்டமைக்கும், தொழிற்துறையை மீட்டெடுக்கும். இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திமுக கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி! - டிடிவி தினகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.