

நெல்லை: நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட பைக், பெட்ரோல் இல்லாமல் நின்றதால், அதைத் திரும்பக் அதே இடத்திலேயே விட முயன்ற தவெக நிர்வாகி உட்பட இரண்டு திருடர்களை, காவல்துறையினர் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை, வி.எம். சத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (26) என்பவர், தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 12-ம் தேதி காலை 11:30 மணியளவில் தனது அப்பாச்சி பைக்கில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தின் 1ம் பிளாட்பாரம் அருகே நிறுத்திவிட்டு, ஏடிஎம்-ல் பணம் நிரப்பச் சென்றுள்ளார்.
சுமார் 12:15 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கைக் காணவில்லை. இதுகுறித்து அவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். சிறிது நேரத்தில் 2 பேர் ஒரு பைக்கை தள்ளிக்கொண்டு வருவதை போலீசார் பார்த்தனர். போலீசார் எதற்காக தள்ளிக்கொண்டு வருகிறார்கள் என்பதை அறிய அவர்களை நோக்கி நடந்து சென்ற போது, அந்த நபர்கள் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேலப்பாளையம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின.
இதில், பைக்கை தள்ளிக்கொண்டு வந்த நபர்கள் சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (30), நாங்குநேரியைச் சேர்ந்த தங்கராஜா (37) என்பது தெரியவந்தது. அவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் 1ம் பிளாட்பாரத்தில் நின்றிருந்த அப்பாச்சி பைக்கை திருடிக்கொண்டு அதே பைக்கில் சென்றுள்ளனர். நெல்லை, பெருமாள்புரம், என்ஜிஓ காலனி அருகே சென்ற போது அந்த பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது.
இதனால் செய்தறியாமல் திகைத்த அவர்கள் அங்கிருந்து பைக்கை தள்ளிக்கொண்டே புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் பைக் திருடியதை கண்டுபிடித்துவிட்டதாக நினைத்து ஓட்டம் பிடித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தொடர் விசாரணையில், முத்துக்குமார் வெற்றிக்கழக நிர்வாகி என்பதும், பைக் மெக்கானிக் கடை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் பழைய பைக்குகளை திருடினால் யாரும் புகார் அளிக்க வரமாட்டார்கள். அப்படியே புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தொடர் பைக் திருட்டி ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
திருடர்களின் ‘புத்திசாலித்தனமான’ பதில்
விசாரணையின்போது போலீசார் பைக்கில் பெட்ரோல் தீர்ந்த பிறகு அங்கே விட்டுச் செல்லாமல் எதற்காக மீண்டும் எடுத்த இடத்தில் விடுவதற்காக வந்தீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த திருடர்கள் பைக் பெட்ரோல் இல்லாமல் நின்ற இடத்தில் விட்டால் போலீசார் அந்தப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை பார்த்து எங்களை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் எடுத்த இடத்தில் விட்டால் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். புகார் அளிக்கவும் மாட்டார்கள் என நினைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருடர்களின் இந்த புத்திசாலித்தனமான பதிலைக் கேட்டு போலீசார் ஆச்சரியமடைந்தனர்.
இதையும் படிக்க.. சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வு அறைகள்: மு.க. ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.