

'டிட்வா' புயல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நாளை (நவ. 29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச. 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 1991-1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு நாளை(நவ. 29, சனிக்கிழமை) அன்று நடைபெறவிருந்தது.
இந்நிலையில் டிட்வா புயலால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச. 6 ஆம் தேதி, சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள (சென்னை தவிர்த்து) ஊரகப் பகுதியில் கிராமப் பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கடந்த நவ. 4ல் முடிவடைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.