
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கண்துடைப்புக்காக திமுக அரசு ஆணையம் அமைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதனை விமர்சித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ``தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021 ஆம் ஆண்டிலிருந்து, 2023 ஆம் ஆண்டு வரை, 3 ஆண்டுகளில், 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.
இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.
இந்த நிலையில், சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, 4 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதல்வர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடவேண்டிய இந்தக் குழு, கடந்த 4 ஆண்டுகளில், வெறும் 3 முறையே கூடியிருக்கிறது.
இந்தக் குழுவின் தலைவரான முதல்வர், இதுகுறித்து ஏன் பேச மறுக்கிறார்? இதுதவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ஏடிஜிபி தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: கரூர் பலி! தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.