
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தலைவர்களான பிரதீப் ஜான் மற்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியான அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் அக்.24 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை குன்னூர், மாஞ்சோலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவு நேரத்தில் டெல்டா மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் காலை நேரத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தமிழகத்திற்கு நேரடி தாக்கம் இருக்காது. அக்டோபர் 23 முதல் நவம்பர் 7 வரை வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடைய உள்ளது.
வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்ததாலும், அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நாளை காலை வரை மழைபொழிவு அதிகரிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதோடு, தென்கிழக்கு அரபிக்கடல், குமரி கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாக். தாக்குதலில் 3 ஆப்கன் வீரர்கள் உள்பட 8 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.