
பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி அன்புமணி, கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் இதுகுறித்து ஆக. 31-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி தரப்பில் எந்த பதிலும் இதுவரை அனுப்பப்படவில்லை.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக மாநில நிர்வாகக் குழு கூட்டம் கூடி இன்று(செப். 3) ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி, பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய ராமதாஸ், ”அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என்பது பற்றியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வருகிற செப். 10 ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். நிர்வாகக் குழு கூடி, மேலும் 10 நாள்கள் அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளது” என்றார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய அன்புமணி, “ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.