
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளி பகுதியில் வடமாநிலத்தவர் குடியிருப்பில் வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நீதி கேட்டும், இழப்பீடு கேட்டும் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இழப்பீடு கேட்டு சகத் தொழிலாளர்கள் காவல்துறை மீது நேற்று கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். இதில், துணை ஆணையர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில், சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு நேற்று போராட்டம் நடத்தியபோது காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களில் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு 29 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலைபார்த்து வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத், திங்கள்கிழமை நள்ளிரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1000-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் உடலை சொந்த ஊர் கொண்டு செல்லும் செலவையும் ஏற்றுக்கொள்வதாக ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.