/

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதவிப் பறிப்பும் எதிர்வினைகளும்!

News image
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்- கோப்புப் படம்
Updated On :6 செப்டம்பர் 2025, 1:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு கிளம்பும்நிலையில், மற்றொரு புறம் கொண்டாடியும் வருகின்றனர்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்தவருமான செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்து, பதவிப் பறிப்பை மேற்கொண்டார்.

இருப்பினும், கழகத்தை ஒன்றிணைக்க விதித்த 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் கூறினார். இதனிடையே, தங்களையும் கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 100-க்கும் மேற்பட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் பதவிப் பறிப்பைக் குறிப்பிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பதவிப் பறிப்பு நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சநிலை என்றும், செங்கோட்டையனின் சபதம் வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும், செங்கோட்டையனின் பதவிப் பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல்: கட்சி நலனுக்கு உகந்தது இல்லை. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை எண்ணி பார்க்க வேண்டும் என்று சசிகலாவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், செங்கோட்டையன் பதவிப் பறிப்பு நடவடிக்கையை பட்டாசு வெடித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.