நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்

நானும் நீங்களும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தோம்! -அரியலூரில் விஜய்
அரியலூரில் விஜய்
அரியலூரில் விஜய்
Published on
Updated on
1 min read

அரியலூர்: வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள இடத்தில் தமது வாகனத்தின் மேலேறி நின்றபடி மைக் பிடித்த விஜய், தாமதமாக வந்தடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் தமது உரையைத் தொடங்கினார்.

அவர் பேசும்போது, “பாஜக செய்வது துரோகம் என்றால், திமுக அரசு நம்மை நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்!

கிட்டத்தட்ட, நானும், நீங்களும், எல்லோரும் சேர்ந்துதான் இவர்கள்(திமுக) நல்லது செய்வார்கள் என்று தேர்ந்தெடுத்தோம்... ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை நமக்கு கொடுத்தார்கள். அவற்றுள் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது?

முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதைவிடுகிறார்... இப்படி கதைவிடுகிறீர்களே எனது அருமை ‘சி.எம். சார்!’

ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற என்று நீங்களே சொல்லிவிட்டு, இப்போது நீங்கள் சொல்வது அனைத்தும் ரீல்ஸ்தான்!

இதற்கு பெயர் நம்பிக்கை மோசடி! மக்களை ஏமாற்றுவதில் இவர்கள் இரண்டு பேரும் ஒரே வகையறாதான்!” என்றார்.

அதன்பின், அனைத்து தரப்பு மக்களையும் சார்ந்துள்ள பிரச்சினைகளைக் குறித்து திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும், அதை அவர்கள் நிறைவேற்றவேயில்லை என்றும் விஜய் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அரியலூர் மாவட்டப் பிரச்சினைகளையும் பட்டியலிட்டுப் பேசிய விஜய், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் போதிய பேருந்து வசதிகள் இங்கு செய்யப்படவில்லையே, ஏன்? என்று கேள்வியெழுப்பினர்.

பாஜகவுடன் மறைமுக உறவை திமுக கொண்டிருப்பது தெளிவாக வெளிப்படுவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

தமது உரையை நிறைவுசெய்யும் முன், “சரி வந்ததிலிருந்து அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பும் நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன்? என்பதைச் சொல்கிறேன் இப்போது.

‘தீர்வை நோக்கி போவதும், தீர்வு காண்பதுமே நம்ம தவெகவின் லட்சியம்! நம்முடைய தேர்தல் அறிக்கையில் இதற்கான விளக்கத்தை ரொம்ப தெளிவாகச் சொல்லுவோம்.’

ஆனால், அதற்கு முன்னாடி, ‘அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாகக் கொடுப்போம்!

அதிலும், பெண்களின் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படி விஷயங்களில் சமரசம் செய்யவே மாட்டோம்.

ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம்! குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்! ஊழல் இல்லாத தமிழகம்! உண்மையான மக்களாட்சி; மனசாட்சியுள்ள மக்களாட்சி! நம்பிக்கையுடன் இருங்கள்! நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார்.

Summary

You, me, and everyone together chose that they (DMK) would do good... But, they gave us 505 election promises. How many of those promises has the DMK government fulfilled?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com