
காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், உடற்கூராய்வின் போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரது மூத்த மகன் முத்து கார்த்திக்(17) என்ற சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
இந்த விசாரணையின் போது முத்துகார்த்திக்கை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தனது மகன் இறப்புக்கு காரணமான மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஜெயா வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முத்து கார்த்திக் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
அதன் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் மதுரை எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் உத்தரவு பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.