சீமானுக்கு எதிரான வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீமான், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆா். சாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினேன். அப்போது ஈழம், காஷ்மீா் பிரச்னை, சேலம் 8 வழிச்சாலை, நியூட்ரினோ உள்ளிட்டவை குறித்து பேசினேன். இந்தக் கூட்டம் முடிந்து 3 மாதங்களுக்குப் பின்னா் உதவி ஆய்வாளா் கொடுத்த புகாரின் பேரில், என் மீது தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2023-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் எஸ்.ரூபன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கில் இருந்து சீமானை விடுவித்து உத்தரவிட்டாா்.