
புதுச்சேரியின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ஜ.க. அரசின் பாசிச ஆதிக்கத்திலிருந்தும், அதற்கு துணை நிற்கும் புதுச்சேரி பா.ஜ.க. கூட்டணி அரசிடமிருந்தும் மாநிலத்தை மீட்டு, புதுச்சேரியின் ‘மண்-மொழி-மானம்’ காக்க, கட்சியின் சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரை முன்னெடுக்கப்படும்.
புதுச்சேரியின் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, பாசிச பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் அவலங்களைச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களைக் கட்சி உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
இப்பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற, கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமைக் கழகத்தால் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
புதுச்சேரி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநிலக் கழகத்தின் மாநில, தொகுதி , வட்ட , ஊர்க்கிளை, உட்கிளை கழகச் செயலாளர்கள் என அனைவரும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் முழு மூச்சோடு இணைந்து பணியாற்றி, மாநிலத்தின் 30% வாக்காளர்களைக் கட்சி உறுப்பினராக்கிட வேண்டும் என்ற இலக்கை அடைந்திட வேண்டும்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை புதுச்சேரி மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநில தி.மு. கழக உறுப்பினர் சேர்க்கை பணியினை ஒருங்கிணைத்துச் செயலாற்ற, தலைமைக் கழகத்தால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.