முதன்மைச் செயல் அதிகாரி நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வக்ஃப் வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வக்ஃப் வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான எம்.அஜ்மல்கான் தாக்கல் செய்த மனுவில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டப்படி மாநில வக்ஃப் வாரியத்துக்கு தமிழக அரசின் இணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாத ஐஏஎஸ் அதிகாரியை முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
ஆனால், தமிழக அரசு துணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியான அப்தாப் ரசூல் என்பவரை வக்ஃப் வாரியத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக கடந்த மே மாதம் நியமித்துள்ளது. இது வக்ஃப் வாரிய சட்டத்துக்கு எதிரானது. எனவே, அப்தாப் ரசூல் வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அதிகாரியாக செயல்படத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ராமமூா்த்தி ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அதிகாரி நியமனம் குறித்த ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வக்ஃப் வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










