
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள், செவ்வாய் (ஆக. 24, 25) இரு நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள், செவ்வாய் (ஆக. 24, 25) இரு நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டப் பகுதிகளில் திங்கள், செவ்வாய் (ஆக. 24, 25) ஆகிய இரு நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோல், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சேலம், மதுரை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் திங்கள்கிழமை (ஆக. 24) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 102.2, மதுரை நகரம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் உள்ள சின்னக்கல்லாறு பகுதியில் 20 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளான, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





