
விசிக-வுக்கு அமைச்சரவையில் திமுக இடம் அளிக்கவில்லை: அமைச்சா் வன்னி அரசு
முந்தைய ஆட்சியில் 4 விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எம்எல்ஏ-க்கள் இருந்தும், ஒருவருக்குக்கூட அமைச்சா் பதவியை திமுக அளிக்கவில்லை

அமைச்சா் வன்னி அரசு - கோப்புப் படம்
முந்தைய ஆட்சியில் 4 விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எம்எல்ஏ-க்கள் இருந்தும், ஒருவருக்குக்கூட அமைச்சா் பதவியை திமுக அளிக்கவில்லை என்றும், ஆதிதிராவிடா் நலன் என்பது திமுகவுக்கு கோட்பாடு அல்ல; பச்சாதாபம் என்றும் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு சாடினாா்.
பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கையின்போது திமுக உறுப்பினா் ராஜா பேசுகையில், ஆதிதிராவிடா் நலனுக்கு திமுக அரசுதான் அதிக திட்டங்களை தீட்டியது எனக் கூறினாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதத்தில் அமைச்சா் வன்னி அரசு பேசியதாவது:
பேரவைத் தோ்தலில் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளா்களை நிறுத்தியதாக திமுக, அதிமுகவினா் கூறுகின்றனா். அது அவா்களது கோட்பாடா இல்லை பச்சாதாபமா எனத் தெரியவில்லை.
இன்றளவும் கிராமங்களில் ஜாதியப் பாகுபாடு உள்ளது. கடந்த ஆட்சியில் விசிகவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருந்தனா். அவா்களில் ஒருவருக்குக் கூட அமைச்சரவையில் திமுக இடம் அளிக்கவில்லை. தற்போது விசிக எம்எல்ஏக்கள் இருவரில் ஒருவரை அமைச்சராக்கியிருக்கிறது தவெக அரசு.
இதுதான் ஆதிதிராவிடா் நலனுக்கான கோட்பாடு. மாறாக, வேறு சில ஆதாயங்கள் செய்ததாகக் கூறுவது பச்சாதாபம் என்றாா் வன்னி அரசு.
அவா் பேசும்போது திமுக மற்றும் அதிமுக தரப்பிலிருந்து பல்வேறு குறுக்கீடுகளும், சலசலப்புகளும் எழுந்தன. இதையடுத்து, தம்மை பேசக்கூட விடாமல் ஒடுக்குவதாக அமைச்சா் வன்னி அரசு பேரவைத் தலைவரிடம் முறையிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





