
அந்தமானில் தரையிறங்க முடியாமல் 176 பயணிகளுடன் சென்னை திரும்பிய விமானம்!
அந்தமான் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, 176 பயணிகளுடன் புறப்பட்ட ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், அங்கு தரையிறங்க முடியாததால், மீண்டும் சென்னை திரும்பியது.

அந்தமான் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், அங்கு தரையிறங்க முடியாததால், மீண்டும் சென்னை திரும்பியது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை அந்தமான் நோக்கி புறப்பட்ட விமானம், அந்தமான் வான்வெளியை நெருங்கியபோது, கடுமையான சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்க முடியவில்லை.
நீண்ட நேரம் வானில் வட்டமடித்த விமானம், வானிலை சீரடையாததால் பிற்பகலில் மீண்டும் சென்னை திரும்பி தரையிறங்கியது. வானிலை சீரடைந்தால் மீண்டும் அந்தமான் புறப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடா்ந்து மோசமான வானிலை நிலவியதால் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, 176 பயணிகளும் திங்கள்கிழமை (ஆக. 31) காலை 9.10 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அந்தமான் அழைத்துச் செல்லப்படுவா் என விமான நிறுவனம் தெரிவித்தது.
இதனால், இரவு தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்து தரக் கோரி பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். முதலில் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு இதுபோன்ற வசதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், பயணிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
இதையடுத்து, பயணிகளுக்காக சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 31 பயணிகள் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை காலை விமான நிலையத்துக்கு வருவதாகத் தெரிவித்துச் சென்றனா்.
மீதமுள்ள 145 பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனா். இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





