அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Madras HighCourt
சென்னை உயர்நீதிமன்றம்கோப்புப்படம்
Updated on
1 min read

மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தேர்தலில் கடந்த 6 ஆண்டுகளாக போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டு செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளின் பதிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தமிழகத்தில் 42 கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவுகளை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்பட பல அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்தன. அதில், தங்களது கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில், அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியுமே தவிர, பதிவை ரத்து செய்ய முடியாது என வாதிடப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படியான இந்த நடவடிக்கையை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக வாதிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், மனுதாரர்களான கட்சிகள் 6 ஆண்டுகளில் உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டதாகவும், கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிட்டதாகவும் கூறுகின்றன. ஆனால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்றுத்தான் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதித்தால் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற அந்தஸ்தை இக்கட்சிகளுக்கு வழங்கியது போல் ஆகிவிடும். எனவே, இந்த மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரதான வழக்கின் விசாரணையை மார்ச் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com