மாணவர்களிடம் நண்பர்களாகப் பழகி பாடங்களைப் புரிய வைக்க வேண்டும்: புதிய ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுரை

மாணவர்களிடம் நண்பர்களாகப் பழகி பாடங்களைப் புரிய வைக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.
anbil mahesh
அன்பில் மகேஸ் கோப்புப் படம்
Updated on
1 min read

மாணவர்களிடம் நண்பர்களாகப் பழகி பாடங்களைப் புரிய வைக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.

தமிழக பள்ளிக் கல்வியில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு புதிதாக முதுநிலை ஆசிரியர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான நுழைவு நிலை பயிற்சியை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கின் அமைச்சர் அன்பில் மகேஸ் புதன்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் உள்ள விஷயங்களை மட்டுமின்றி, அவர்களுக்கு வயதுக்கேற்ப என்னென்ன தேவையோ அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கற்பித்தல் என்பது வெறும் பணி அல்ல; அது ஆசிரியர்கள் மேற்கொள்ளும் தொண்டு.

புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள முதுநிலை ஆசிரியர்கள் நமது மாநிலத்துக்கான கல்விக் கொள்கை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் கல்வி என்பதைத் தாண்டி அனைவருக்கும் தரமான நவீன கல்வி என்ற நிலையை பள்ளி அளவில் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். அவற்றையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுடன் நண்பர்களாகப் பழகி பாடங்களைப் புரிய வைக்க வேண்டும். நண்பராகப் பழகினால்தான் மாணவர்கள் எவ்வித அச்சம், கூச்சமின்றி ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களைக் கேட்பார்கள்.

புதிய ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை-2025, அடிப்படை நிர்வாகப் பயிற்சி, பாடப்பொருள் சார்ந்த கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள், போக்úஸô சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி, நான் முதல்வன் திட்டம் மற்றும் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டல், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி உள்ளிட்ட 9 வகையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தமிழகம் சமூக நீதிக்கான மண் ஆகும். எல்லோருக்கும் எல்லாம் என்பதை சமுதாயத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு மாணவராவது பள்ளிக்கு வருகை புரிவார்கள். அவர்களை தமது பிள்ளைகளாக நினைத்து பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் உயர்ந்து வருகிறது. அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், எஸ்சிஇஆர்டி இயக்குநர் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சியில் 1,061 முதுநிலை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com